ஓணம் பண்டிகை வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று ஈரோட்டில் ஓணம் கொண்டாட்டங்கள் களைகட்டின. ஈரோடு கேரள சமாஜம் அலுவலகத்தில் நடைபெற்ற அத்தம் பூக்காலம் நிகழ்ச்சியில் ஏராளமான கேரள மக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
விழாவில் பல்வேறு வண்ண மலர்களை கொண்டு அழகிய அத்தப்பூ கோலங்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து பெண்கள் பாரம்பரிய முறையில் திருவாதிரை நடனமாடி, ஓணம் பண்டிகையை வரவேற்றனர். விழா முழுவதும் கேரள மக்களின் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உற்சாகமாக நடைபெற்றது.
ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புராண நம்பிக்கையின்படி, தங்கள் மக்களை காண ஆண்டுதோறும் மாவேலி மன்னன் வருவதாகவும், அவரை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகையின் முதல் நாளில் வீடுகளிலும் பொது இடங்களிலும் அத்தப்பூ கோலமிடப்படுவதாகவும் விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.