மாவட்டம்

மாவட்டம்

வானில் பறந்த ட்ரோன்கள்; அசத்திய மாணவர்கள்! ஈரோட்டில் ரோபோடிக்ஸ் சாகசம் 

ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியில், உயர்கல்வி மாணவர்களின் நவீன தொழில்நுட்பத் திறனை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரிகளுக்கு இடையேயான ‘ட்ரோன் மற்றும் ரோபோடிக்ஸ்’ போட்டி நடைபெற்றது. 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இப்போட்டியில் களமிறங்கினர். தாங்களே சொந்தமாக வடிவமைத்த நவீன ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ரோபோக்களைக் கொண்டுவந்து, அவற்றின் இயக்கம் மற்றும் பயன்பாடுகளைச் செய்து காட்டினர். வான்வெளியில் அமைக்கப்பட்ட கடினமான தடைகளை லாவகமாகக் கடந்து செல்வது, குறிப்பிட்ட எடைகளைத் தாங்கிக்கொண்டு இலக்கை அடைவது எனப் பல்வேறு சவாலான பிரிவுகளின் கீழ் சோதனைகள் நடத்தப்பட்டு, அதிவேகமாகவும் துல்லியமாகவும் செயல்பட்ட சிறந்த ட்ரோன்கள் வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டன. நிறைவு விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்குக் கல்லூரித் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், நிர்வாகி எம்.யுவராஜா, முதல்வர் டாக்டர் ஜெயராமன், சென்னை ‘கருடா ஏர் ஸ்பேஸ்’ அமைப்பின் அதிகாரி கே.பி.பொற்செல்வி, இசிஇ (ECE) துறைத் தலைவர் நிஷா அஞ்சலின் மற்றும் பேராசிரியர் அஸ்வத் ஆகியோர் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர்.

மாவட்டம்

ஈரோட்டில் கலைகட்டிய ஓணம் கொண்டாட்டம்: அத்தப்பூ கோலமிட்டு நடனமாடிய பெண்கள்…

ஓணம் பண்டிகை வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று ஈரோட்டில் ஓணம் கொண்டாட்டங்கள் களைகட்டின. ஈரோடு கேரள சமாஜம் அலுவலகத்தில் நடைபெற்ற அத்தம் பூக்காலம் நிகழ்ச்சியில் ஏராளமான கேரள மக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு வண்ண மலர்களை கொண்டு அழகிய அத்தப்பூ கோலங்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து பெண்கள் பாரம்பரிய முறையில் திருவாதிரை நடனமாடி, ஓணம் பண்டிகையை வரவேற்றனர். விழா முழுவதும் கேரள மக்களின் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உற்சாகமாக நடைபெற்றது. ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புராண நம்பிக்கையின்படி, தங்கள் மக்களை காண ஆண்டுதோறும் மாவேலி மன்னன் வருவதாகவும், அவரை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகையின் முதல் நாளில் வீடுகளிலும் பொது இடங்களிலும் அத்தப்பூ கோலமிடப்படுவதாகவும் விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஈரோட்டுக்கு அடித்தது ஜாக்பாட்! ₹130 கோடி முதலீடு செய்யும் தனியார் நிறுவனம்! 

பிரபல விளையாட்டு மற்றும் ‘ஆக்டிவ்வேர்’ உடைகள் உற்பத்தி நிறுவனமான டெக்னோஸ்போர்ட் (TechnoSport), ஈரோட்டில் உள்ள தனது உற்பத்தி ஆலையை இரண்டாம் கட்டமாக விரிவாக்கம் செய்ய தமிழக அரசுடன் ₹130 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் தொழிற்சாலையின் உற்பத்தித் திறன் கணிசமாக உயருவதுடன், ஈரோடு மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போதைய நிதியாண்டின் இறுதிக்குள் தனது ஆடைகளின் உற்பத்தித் திறனை நாளொன்றுக்கு 25 டன்னில் இருந்து 40 டன்னாக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியிலான உடைகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் டெக்னோஸ்போர்ட், உற்பத்தி, தரம் மற்றும் சந்தைப்படுத்துதல் என அனைத்தையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் மாடலை பின்பற்றி வருகிறது. நாடு முழுவதும் 16,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் 66 பிரத்யேக ஷோரூம்கள் மூலம் வர்த்தகம் செய்து வரும் இந்நிறுவனம், வரும் 2027 நிதியாண்டிற்குள் தனது வருவாயை ₹1,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த புதிய ₹130 கோடி விரிவாக்க முதலீடு, கொங்கு மண்டலத்தின் ஜவுளி மற்றும் விளையாட்டு ஆடை உற்பத்தித் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்டம்

72-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பவானிசாகர் அணை!

தமிழ்நாட்டின் விவசாயப் புரட்சிக்கும் குடிநீர் தேவைகளுக்கும் என்றும் வற்றாத ஊற்றாக விளங்கும் பவானிசாகர் அணை, இன்று 72-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் பவானி மற்றும் மாயாறு ஆகிய இரு ஆறுகளும் சங்கமிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் அமைந்துள்ள இந்த அணை, 105 அடி கொள்ளளவுடன் கொங்கு மண்டலத்தின் ஒட்டுமொத்த விவசாயப் பொருளாதாரத்தையும் தாங்கிப்பிடிக்கும் முதன்மை நீர் ஆதாரமாகத் திகழ்கிறது. சுதந்திர இந்தியாவின் தொடக்க காலத்தில் (1948 – 1955) பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை, அன்றைய இந்தியப் பொறியாளர்களின் ஒப்பற்ற திறமைக்குச் சான்றாக நிற்கிறது. ஆசியாவிலேயே மிக நீளமான “மண் அணை” (Earthen Dam) என்ற உலகளாவிய பெருமையைக் கொண்ட இதன் மொத்த நீளம் சுமார் 8.8 கிலோமீட்டர் ஆகும். அக்காலத்தில் நவீன இயந்திரங்கள் அதிகம் இல்லாத நிலையிலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பால் உருவான இந்த அணை, வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதில் இன்றளவும் இணையற்ற தொழில்நுட்ப அதிசயமாக விளங்குகிறது. 72 ஆண்டுகளைக் கடந்த போதிலும், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் 2.47 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு வாழ்வாதாரமாக இந்த அணை திகழ்ந்து வருகிறது. தென்மேற்குப் பருவமழைக் காலங்களில் நீலகிரி மலையிலிருந்து ஆர்ப்பரித்து வரும் வெள்ள நீரைக் கட்டிப்போட்டு, லட்சம் குடும்பங்களின் தாகம் தீர்க்கும் இந்த அணை தனது 72-வது பிறந்தநாளில் மேலும் பல தலைமுறைகளைக் காக்கும் கம்பீரத்தோடு நிமிர்ந்து நிற்கிறது.

மாவட்டம்

நடுரோட்டில் ‘ஹாயாக’ படுத்திருந்த சிறுத்தை… வாகன ஓட்டிகள் ஷாக்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியையொட்டிய திம்பம் மலைப்பாதையில், அதிகாலை நேரத்தில் சிறுத்தைப்புலி ஒன்று நடுரோட்டிலேயே ‘ஹாயாக’ படுத்திருந்தது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், சாலையின் நடுவே சிறுத்தையை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து வாகனங்களை சற்று தொலைவிலேயே நிறுத்தினர். சிலர் வாகனங்களில் இருந்தபடியே இந்த எதிர்பாராத காட்சியை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.  சுமார் 10 நிமிடங்கள் சாலையிலேயே படுத்திருந்த சிறுத்தை, பின்னர் எழுந்து வனப்பகுதிக்குள் ஓடிச் சென்றது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக வாகனங்களை நிறுத்தி சிறுத்தைக்கு அருகில் செல்லவோ, வாகனத்தை விட்டு கீழே இறங்கவோ கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top