TW EXCLUSIVE: மூடப்பட்ட கதவுகள்… அரசியலுக்கு ‘குட்பை’ சொல்லும் தோப்பு வெங்கடாச்சலம்?
ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர், மாவட்டச் செயலாளர் என தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தவர் தோப்பு வெங்கடாச்சலம். சமீப காலமாக, அவரின் அரசியல் கணக்குகள் எதுவும் கைகூடாமல் போனதால், அரசியலுக்கு ‘முழுக்கு’ போட்டுவிடலாமா என, தீவிரமாக ஆலோசித்து வருவதாகச் சொல்லப்படும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து விஷயம் அறிந்தவர்களிடம் பேசினோம். தேர்தல் தோல்வி… கொந்தளித்த தோப்பு! “2026 சட்டமன்ற தேர்தலில், பெருந்துறை தொகுதியில் தான் தோற்றதற்கு முன்னாள் அமைச்சர் முத்துசாமி தரப்பின் உள்ளடி வேலைகள் தான் முக்கியக் காரணம் என தோப்பு நம்புகிறார். தேர்தல் தோல்வி குறித்து ஆராய தி.மு.க., தலைமை அமைத்த கள ஆய்வுக்குழு பெருந்துறை வந்தபோது, ‘நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை. உங்களுக்கு ஏதவாது தெரிய வேண்டுமென்றால், தொகுதி மக்களிடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றதோடு, இடைத்தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கினால் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன், கட்சித் தலைமை தான் முழு செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுபோக, 2026 பொதுத்தேர்தலுக்கு செலவு செய்த தொகையையும் கட்சி கொடுக்க வேண்டும்’ என்று கள ஆய்வுக் குழுவினரிடம், தோப்பு கறாராகப் பேசியுள்ளார். ‘ராஜினாமா’ அஸ்திரம்… தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் செல்வராஜ், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். உடனே, தி.மு.க தலைவர் ஸ்டாலின், செல்வராஜை அழைத்துப் பேசி சமாதானப்படுத்த, தன்னுடைய ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார். இதே உத்தியை தோப்பு கையாள நினைத்தார். ராஜினாமா அஸ்திரத்தை கையிலெடுத்தால் தலைமை சமாதானத்திற்கு வரும். அப்போது முத்துசாமி ஆதரவாளர்களைத் தூக்கிவிட்டு, தன்னுடைய ஆதரவாளர்களை நியமிக்கச் சொல்லி ‘டிமாண்ட்’ வைக்கலாம் என திட்டமிட்டார். தலைமை இதற்கு இணங்காவிட்டால், தி.மு.க-விலிருந்து விலகி, கட்சி மாறுவதற்கும் தயாராகி வந்தார். தோப்புவின் எதிர்த்தரப்பு, இந்தத் தகவல்களை எல்லாம் அறிவாலயத்தில் போட்டுக் கொடுத்தது. அறிவாலயம் கொடுத்த அதிர்ச்சி! தேர்தல் தோல்விக்குப் பிறகு, அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் த.வெ.கவுக்கு படையெடுத்துவரும் நிலையில், தி.மு.க-வில் இருந்து ஒருவர் கூட செல்லவில்லை. இப்படியான நிலையில், தோப்பு கட்சி தாவினால் தி.மு.க-வின் இமேஜ் ‘டேமேஜ்’ ஆகும் என நினைத்த தலைமை, தோப்பு வகித்து வந்த ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியைப் பிடுங்கியது. இந்த அதிரடி பதவி பறிப்பால் தோப்பு அரண்டு போனதாகச் சொல்கின்றனர். த.வெ.க எண்ட்ரியை தடுத்த அரசியல் எதிரி! த.வெ.க-வில் ஐக்கியமாகிவிட தோப்பு காய்நகர்த்தி வந்த நிலையில், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்த, தனது அரசியல் எதிரியான பெருந்துறை ஜெயக்குமாருக்கு, பெருந்துறை தொகுதியை மட்டும் கொண்ட ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பை த.வெ.க., தலைமை கொடுத்தது. இதனால் தோப்புவின் த.வெ.க திட்டமும் கானல் நீரானது. ‘தோப்பு வேண்டாம்’ – கறார் எடப்பாடி! மீண்டும் அ.தி.மு.க-விற்கு யூ-டர்ன் அடிக்க நினைத்த தோப்பு, எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் மூலம் தூது அனுப்பினாராம். எடப்பாடியோ, ‘பெருந்துறை ஜெயக்குமார் நம்பிக்கை துரோகி என்றால், தோப்பு நம்பகத்தன்மை இல்லாத ஆளுங்க! எப்ப வேணும்னாலும் அவர் நம்ம காலை வாரி விடுவாரு. இப்போ இருக்குற பிரச்னையே போதும்’ என, ஒரு பெரிய கும்பிடு போட்டிருக்கிறார். இதனால், தோப்புவின் அ.தி.மு.க பிளானும் சுக்குநூறாக உடைந்துள்ளது. அண்ணாமலையிடம் அடைக்கலமா? மற்றொரு பக்கம், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பில் தோப்பு இணையப் போவதாகவும் பேச்சு அடிபடுகிறது. அதற்கு துளியும் வாய்ப்பில்லை. ஏனென்றால், 2026 தேர்தல் பிரச்சாரத்திற்காக அண்ணாமலை பெருந்துறை வந்தபோது, தோப்பு வெங்கடாசலம் தரப்பு கிராவல் மண் கொள்ளையில் ஈடுபட்டதாக கடுமையாக விளாசியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுவும் தன்னுடைய தேர்தல் தோல்விக்குக் காரணம் என நினைத்த தோப்பு, கடந்த ஜூலை மாதம், அண்ணாமலை மீது வழக்கு தொடரப் போவதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மாற்றுக் கட்சிகளுக்கு செல்லும் திட்டம் எதுவும் கைகூடாததால், பறிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர் பதவியை எப்படியாவது திரும்பப் பெற்றுவிட வேண்டும் என, தன்னுடைய நண்பரான செந்தில்பாலாஜியை தோப்பு நாடியிருக்கிறார். ஆனால் அவரோ, ‘நானே இப்போது கடும் நெருக்கடியில் இருக்கிறேன். எனவே, இப்போதைக்கு என்னால் எதுவும் செய்ய முடியாது’ என கைவிரித்துவிட்டாராம்”. அரசியலில் இருந்து ஓய்வு? பதவியைப் பிடுங்கி தூக்கிக் கிடாசிய தி.மு.க; துளியும் மதிக்காத அ.தி.மு.க; அடைக்கப்பட்ட த.வெ.க கதவு போன்றவற்றால், என்ன செய்வதெனத் தெரியாமல் தோப்பு கடும் விரக்தியில் இருக்கிறாராம். பதவி – அதிகாரம் என அனைத்தையும் இழந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோப்பு, ‘சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கலாமா? அல்லது முழுமையாக அரசியலில் இருந்தே ஓய்வு பெற்றுவிடலாமா?’ என தீவிர யோசனையில் இருப்பதாகச் சொல்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். இதுகுறித்து, தோப்பு வெங்கடாச்சலத்தின் கருத்தை அறிய, அவரிடம் பேசினோம். “நான் த.வெ.க-வில் சேர்வதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அதேபோல, அ.தி.மு.க-வில் சேர்வதற்கு எடப்பாடியிடம் தூது அனுப்பியதாகச் சொல்வதில் துளியும் உண்மை இல்லை. என்னுடைய தேர்தல் தோல்விக்கு சில நிர்வாகிகளின் உள்ளடி வேலையும் காரணம் என்பதை நான் மறுக்கவில்லை. அதேசமயம் முன்னாள் அமைச்சர் முத்துசாமி தான் இதற்குக் காரணம் என நான் குற்றம்சாட்ட விரும்பவில்லை. நான் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவர் என்னை நம்பி கொடுத்த கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேறு கட்சிக்குச் செல்ல நான் நினைக்கவில்லை. அது அவர்களை அவமானப்படுத்துவது போல் ஆகும். அப்படியொரு தவறை நான் எந்தக் காலத்திலும் செய்ய மாட்டேன். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எந்தப் பதவியும் வேண்டாம் என கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருக்கவே நினைத்தேன். எனவே, பதவி பறிக்கப்பட்டது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் தற்போது தி.மு.க-வில் சாதாரண உறுப்பினராகவே தொடர்கிறேன். என்னை நம்பி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் இருக்கிறார்கள். அப்படியிருக்க, அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. ஆனால், அப்படியொரு முடிவை எடுப்பேனா? என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது” என முடித்துக் கொண்டார். தனிமரம் ‘தோப்பு’ ஆகாது. ஆனால், தன்னுடைய செயல்பாடுகளினால் ‘தோப்பு’ தனிமரமாகி நிற்கிறது!
