TW EXCLUSIVE: ‘அம்பானி’ வரை நட்பு? ‘யார் இந்த ஈரோடு கேசவநாதன்?’ – விக்ரமின் ‘லார் கிப்பான்’ வீடியோவால் சிக்கும் பெரும்புள்ளிகள்!
சர்வதேச அளவில் பாதுகாக்கப்படும் அரிய வகை உயிரினமான ‘லார் கிப்பான்’ குரங்குடன் விளையாடுவது போன்ற வீடியோவை, நடிகர் விக்ரம் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழக வனத்துறை விசாரணையில் இறங்க, விக்ரம் வீடியோவில் இருந்த ‘லார் கிப்பான்’, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் சி.கே.ரங்கநாதனின் இல்லத்தில் இருந்ததும், அது, ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த தொழிலதிபர் கேசவநாதனின் பண்ணையில் இருந்து பெறப்பட்டதும் தெரியவந்தது. அதன்பிறகு, வனத்துறையின் விசாரணை கேசவநாதன் பக்கம் திரும்பியது. பெருந்துறையில் உள்ள அவரது பண்ணையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், உரிய ஆவணங்களின்றி வளர்க்கப்பட்டு வந்த 7 ‘ஆப்பிரிக்கன் சர்வல்’ பூனைகள், 2 ‘லார் கிப்பான்’ குரங்குகள், 2 ‘டஃப்டட் கேப்புசின்’ குரங்குகள் என மொத்தம் 11 அரிய வகை வெளிநாட்டு விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக கேசவநாதன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படியான சூழலில், கேசவநாதனின் பின்னணி அறிந்தவர்களிடம் நாம் விசாரணையில் இறங்க, அதிர வைக்கும் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. ‘யார் இந்த கேசவநாதன்?’ – வெளிச்சத்திற்கு வரும் சர்வதேச தொடர்புகள்! “பெருந்துறை அருகேயுள்ள செல்லப்பகவுண்டன்வலசு கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கேசவநாதன். குவாரி தொழில் செய்து வருகிறார். இவர் அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். ஆரம்பத்தில் இதை பொழுதுப்போக்காக தொடங்கியவர், நாளடைவில் தனது சொந்த ஊரில், சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைத்து, அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகளை வளர்த்ததோடு, அதன் விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. கென்யா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளுக்கு நேரில் சென்று, அங்கு நடைபெற்ற பறவைகள் மற்றும் ‘எக்ஸாட்டிக்’ உயிரினங்கள் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம், சர்வதேச அளவில் ‘எக்ஸாட்டிக்’ உயிரினங்கள் விற்பனையில் இயங்கிவந்த பல்வேறு வெளிநாட்டவர்களின் தொடர்பும் கேசவநாதனுக்குக் கிடைத்துள்ளாகத் தெரிகிறது. ‘அம்பானி’ திருமணத்தில் கேசவநாதன்? இதில் அதிரவைக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், 2024-ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்ற, ஆசியாவின் முன்னணிப் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் பிரமாண்ட திருமணத்தில், கேசவநாதன் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று கலந்து கொண்டதுதான். மல்டி-மில்லியனர்கள் மற்றும் உலகளாவிய பிரபலங்கள் கலந்துகொண்ட அந்த திருமண விழாவில், ஈரோட்டில் குவாரி பிசினஸ் மற்றும் எக்ஸாட்டிக் ஃபார்ம் நடத்தி வரும் கேசவநாதன் பங்கேற்றார் என்றால், அவரது தொடர்புகளின் எல்லைகளை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்(!) ‘முக்கியப் புள்ளிகள்’ சிக்க வாய்ப்பு? கேசவநாதன் என்ற ஒரு தனி நபரிடம், உரிய ஆவணங்கள் இன்றி இத்தனை அரிய வகை உயிரினங்கள் எப்படி வந்தது? அவற்றை எங்கிருந்து பெற்றார்? தற்போது பறிமுதல் செய்யப்பட்ட அரிய வகை உயிரினங்களைப் போல, வேறு ஏதாவது உயிரினங்களை இதற்கு முன் வைத்திருந்தாரா? அவற்றை வேறு யாருக்காவது விற்பனை செய்துள்ளாரா? அவரது பின்னணி மற்றும் தொடர்புகள் என்ன? என்பவை எல்லாம் பெரும் கேள்விகளாக எழுகின்றன. இதையெல்லாம் வனத்துறை அதிகாரிகள் ஆழமாக விசாரித்தால், இந்த விவகாரத்தின் பின்னணியில் வேறு ‘முக்கியப் புள்ளிகள் (!)’ உள்ளனரா என்பது தெரியவரும்” என்றனர். ‘பிள்ளையார் பிடிக்கப்போய்.. குரங்கான கதை’ என்று சொல்லுவார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் ஒரு குரங்கை பிடிக்கப்போய் பல ‘முதலைகள்’ பிடிபடும் போல!




