August 20, 2026

TW Exclusive, தலைப்புச் செய்திகள்

TW EXCLUSIVE: ‘அம்பானி’ வரை நட்பு? ‘யார் இந்த ஈரோடு கேசவநாதன்?’ – விக்ரமின் ‘லார் கிப்பான்’ வீடியோவால் சிக்கும் பெரும்புள்ளிகள்!

சர்வதேச அளவில் பாதுகாக்கப்படும் அரிய வகை உயிரினமான ‘லார் கிப்பான்’ குரங்குடன் விளையாடுவது போன்ற வீடியோவை, நடிகர் விக்ரம் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழக வனத்துறை விசாரணையில் இறங்க, விக்ரம் வீடியோவில் இருந்த ‘லார் கிப்பான்’, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் சி.கே.ரங்கநாதனின் இல்லத்தில் இருந்ததும், அது, ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த தொழிலதிபர் கேசவநாதனின் பண்ணையில் இருந்து பெறப்பட்டதும் தெரியவந்தது. அதன்பிறகு, வனத்துறையின் விசாரணை கேசவநாதன் பக்கம் திரும்பியது. பெருந்துறையில் உள்ள அவரது பண்ணையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், உரிய ஆவணங்களின்றி வளர்க்கப்பட்டு வந்த 7 ‘ஆப்பிரிக்கன் சர்வல்’ பூனைகள், 2 ‘லார் கிப்பான்’ குரங்குகள், 2 ‘டஃப்டட் கேப்புசின்’ குரங்குகள் என மொத்தம் 11 அரிய வகை வெளிநாட்டு விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக கேசவநாதன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படியான சூழலில், கேசவநாதனின் பின்னணி அறிந்தவர்களிடம் நாம் விசாரணையில் இறங்க, அதிர வைக்கும் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. ‘யார் இந்த கேசவநாதன்?’ – வெளிச்சத்திற்கு வரும் சர்வதேச தொடர்புகள்! “பெருந்துறை அருகேயுள்ள செல்லப்பகவுண்டன்வலசு கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கேசவநாதன். குவாரி தொழில் செய்து வருகிறார். இவர் அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். ஆரம்பத்தில் இதை பொழுதுப்போக்காக தொடங்கியவர், நாளடைவில் தனது சொந்த ஊரில், சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைத்து, அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகளை வளர்த்ததோடு, அதன் விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. கென்யா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளுக்கு நேரில் சென்று, அங்கு நடைபெற்ற பறவைகள் மற்றும் ‘எக்ஸாட்டிக்’ உயிரினங்கள் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம், சர்வதேச அளவில் ‘எக்ஸாட்டிக்’ உயிரினங்கள் விற்பனையில் இயங்கிவந்த பல்வேறு வெளிநாட்டவர்களின் தொடர்பும் கேசவநாதனுக்குக் கிடைத்துள்ளாகத் தெரிகிறது. ‘அம்பானி’ திருமணத்தில் கேசவநாதன்? இதில் அதிரவைக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், 2024-ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்ற, ஆசியாவின் முன்னணிப் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் பிரமாண்ட திருமணத்தில், கேசவநாதன் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று கலந்து கொண்டதுதான். மல்டி-மில்லியனர்கள் மற்றும் உலகளாவிய பிரபலங்கள் கலந்துகொண்ட அந்த திருமண விழாவில், ஈரோட்டில் குவாரி பிசினஸ் மற்றும் எக்ஸாட்டிக் ஃபார்ம் நடத்தி வரும் கேசவநாதன் பங்கேற்றார் என்றால், அவரது தொடர்புகளின் எல்லைகளை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்(!) ‘முக்கியப் புள்ளிகள்’ சிக்க வாய்ப்பு? கேசவநாதன் என்ற ஒரு தனி நபரிடம், உரிய ஆவணங்கள் இன்றி இத்தனை அரிய வகை உயிரினங்கள் எப்படி வந்தது? அவற்றை எங்கிருந்து பெற்றார்? தற்போது பறிமுதல் செய்யப்பட்ட அரிய வகை உயிரினங்களைப் போல, வேறு ஏதாவது உயிரினங்களை இதற்கு முன் வைத்திருந்தாரா? அவற்றை வேறு யாருக்காவது விற்பனை செய்துள்ளாரா? அவரது பின்னணி மற்றும் தொடர்புகள் என்ன? என்பவை எல்லாம் பெரும் கேள்விகளாக எழுகின்றன. இதையெல்லாம் வனத்துறை அதிகாரிகள் ஆழமாக விசாரித்தால், இந்த விவகாரத்தின் பின்னணியில் வேறு ‘முக்கியப் புள்ளிகள் (!)’ உள்ளனரா என்பது தெரியவரும்” என்றனர். ‘பிள்ளையார் பிடிக்கப்போய்.. குரங்கான கதை’ என்று சொல்லுவார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் ஒரு குரங்கை பிடிக்கப்போய் பல ‘முதலைகள்’ பிடிபடும் போல!

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

பங்குச்சந்தையில் ‘மாஸ்’ காட்டிய ஈரோடு நிறுவனம்! – முதலீட்டாளர்களுக்கு இவ்வளவு லாபமா?

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ‘மில்கிமிஸ்ட்’, பங்குச்சந்தையில் காலடி எடுத்து வைத்த குறுகிய நேரத்திலேயே முதலீட்டாளர்களுக்கு அபார லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. சுமார் ரூ.1,553 கோடி நிதியைத் திரட்டும் நோக்கில் வெளியிடப்பட்ட இந்த ஐபிஓ, தொடக்கத்திலேயே முதலீட்டாளர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, பொதுப் பங்கு விற்பனையின் போதே இத்துறைக்கான பங்குகள் 56 மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டு சாதனை படைத்தது. மும்பை பங்குச்சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச்சந்தையில் (NSE) மில்கிமிஸ்ட் பங்குகள், அதன் தொடக்க விற்பனை விலையான ரூ.140-ஐ விட 18% கூடுதலாக, அதாவது ரூ.165-க்கு பட்டியலிடப்பட்டு மாஸ் என்ட்ரி கொடுத்தன. வர்த்தகம் தொடங்கிய முதல் நாளிலேயே 10% உயர்ந்து ‘அப்பர் சர்க்கியூட்’ அடித்த இந்த பங்கு, அடுத்தடுத்த வர்த்தக நாட்களிலும் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு ரூ.211.80 வரை உயர்ந்தது. இதன் மூலம் ஐபிஓ ஆரம்ப விலையில் இருந்து முதலீட்டாளர்களுக்குக் குறுகிய காலத்தில் 51% வரையிலான லாபம் கிடைத்துள்ளது. பங்குகளின் இந்த அதிரடி விலையேற்றத்தைத் தொடர்ந்து, மில்கிமிஸ்ட் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.15,000 கோடியைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தென்னிந்தியாவில் பன்னீர், சீஸ், தயிர் மற்றும் வெண்ணெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களின் சந்தையில் தனக்கென தனிமுத்திரை பதித்துள்ள இந்நிறுவனம், ஐபிஓ மூலம் திரட்டிய நிதியைக் கொண்டு தங்களது கடன் சுமையைக் கணிசமாகக் குறைக்கவும், ஈரோடு பெருந்துறையில் அமைந்துள்ள அதிநவீன உற்பத்தி ஆலையை மேலும் விரிவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

மாவட்டம்

ஈரோடு: வானில் சாகசம் செய்த ‘ட்ரோன்கள்’ – அசத்திய கல்லூரி மாணவர்கள்!  

ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியில், உயர்கல்வி மாணவர்களின் நவீன தொழில்நுட்பத் திறனை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரிகளுக்கு இடையேயான ‘ட்ரோன் மற்றும் ரோபோடிக்ஸ்’ போட்டி நடைபெற்றது. 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இப்போட்டியில் களமிறங்கினர். தாங்களே சொந்தமாக வடிவமைத்த நவீன ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ரோபோக்களைக் கொண்டுவந்து, அவற்றின் இயக்கம் மற்றும் பயன்பாடுகளைச் செய்து காட்டினர். வான்வெளியில் அமைக்கப்பட்ட கடினமான தடைகளை லாவகமாகக் கடந்து செல்வது, குறிப்பிட்ட எடைகளைத் தாங்கிக்கொண்டு இலக்கை அடைவது எனப் பல்வேறு சவாலான பிரிவுகளின் கீழ் சோதனைகள் நடத்தப்பட்டு, அதிவேகமாகவும் துல்லியமாகவும் செயல்பட்ட சிறந்த ட்ரோன்கள் வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டன. நிறைவு விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்குக் கல்லூரித் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், நிர்வாகி எம்.யுவராஜா, முதல்வர் டாக்டர் ஜெயராமன், சென்னை ‘கருடா ஏர் ஸ்பேஸ்’ அமைப்பின் அதிகாரி கே.பி.பொற்செல்வி, இசிஇ (ECE) துறைத் தலைவர் நிஷா அஞ்சலின் மற்றும் பேராசிரியர் அஸ்வத் ஆகியோர் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர்.

மாவட்டம்

ஈரோடு: களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்; அத்தப்பூ கோலமிட்டு நடனமாடிய பெண்கள்…

ஓணம் பண்டிகை வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று ஈரோட்டில் ஓணம் கொண்டாட்டங்கள் களைகட்டின. ஈரோடு கேரள சமாஜம் அலுவலகத்தில் நடைபெற்ற அத்தம் பூக்காலம் நிகழ்ச்சியில் ஏராளமான கேரள மக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு வண்ண மலர்களை கொண்டு அழகிய அத்தப்பூ கோலங்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து பெண்கள் பாரம்பரிய முறையில் திருவாதிரை நடனமாடி, ஓணம் பண்டிகையை வரவேற்றனர். விழா முழுவதும் கேரள மக்களின் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உற்சாகமாக நடைபெற்றது. ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புராண நம்பிக்கையின்படி, தங்கள் மக்களை காண ஆண்டுதோறும் மாவேலி மன்னன் வருவதாகவும், அவரை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகையின் முதல் நாளில் வீடுகளிலும் பொது இடங்களிலும் அத்தப்பூ கோலமிடப்படுவதாகவும் விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு, தலைப்புச் செய்திகள்

‘விக்ரம்’ வீடியோ… ஈரோடு பண்ணை… அடுத்தடுத்து சிக்கிய அரிய விலங்குகள்! 

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் அரிய வகை ‘லார் கிப்பான்’ (Lar Gibbon) குரங்குடன் நடிகர் விக்ரம் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்திய வனத்துறையினர், அந்த குரங்கு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் சி.கே.ரங்கநாதனின் இல்லத்திலிருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பண்ணை உரிமையாளரான தொழிலதிபர் கேசவநாதனிடம் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டறிந்தனர். இந்த விவகாரத்தில் தங்களுக்கு நேரடித் தொடர்பு ஏதுமில்லை என நடிகர் விக்ரம் மற்றும் ரங்கநாதன் தரப்பில் வனத்துறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் பெருந்துறை பண்ணையில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். பெருந்துறை பண்ணையில் நடத்தப்பட்ட ஆய்வில், அரிய வகை குரங்குகளை வைத்திருந்ததற்கான உரிய ஆவணங்கள் தொழிலதிபர் கேசவநாதனிடம் இல்லாதது தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்த 3 லார் கிப்பான் குரங்குகளில் ஒன்று உயிரிழந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, வனத்துறைக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்காதது மற்றும் ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காகக் தொழிலதிபர் கேசவநாதன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சோதனையில், ஆவணங்களின்றி வளர்க்கப்பட்ட 7 ஆப்பிரிக்கன் சர்வல் பூனைகள், 2 லார் கிப்பான் குரங்குகள் மற்றும் 2 டஃப்டட் கேப்புசின் குரங்குகள் என மொத்தம் 11 அரிய வகை வெளிநாட்டு விலங்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகள் அனைத்தும் தற்போது பண்ணையிலேயே வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு இவை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அல்லது அங்கீகரிக்கப்பட்ட வனவிலங்கு மீட்பு மையத்திற்கு மாற்றப்படவுள்ளதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார். இதனிடையே, வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், இதன் பின்னணியில் உள்ள ஒரு பெரும் நெட்வொர்க் சிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கின்றனர்.

Scroll to Top