இந்தியா

இந்தியா, தலைப்புச் செய்திகள்

26 ஆண்டுகள் ‘டிமிக்கி’… காட்டிக் கொடுத்த கைரேகை: போலீஸில் மாட்டிய ‘பில்டர்’ கைதியின் கதை!

1995-ல் நடந்த ரூ.1 கோடி கடத்தல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர், 26 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் ரிஷி சேத்தி என்பவரை கடத்தி, அவரது குடும்பத்திடம் ரூ.1 கோடி பிணைத்தொகை கேட்கப்பட்ட வழக்கில் அமித் யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். போலீசாரின் பொறி மூலம் அவர் பிடிபட்டதுடன், கடத்தப்பட்ட நபரும் பத்திரமாக மீட்கப்பட்டார். 1999-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீட்டின்போது கிடைத்த ஒரு மாத இடைக்கால ஜாமீனை பயன்படுத்தி தப்பியவர், அதன் பிறகு 26 ஆண்டுகளாக போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி வந்துள்ளார்.  தலைமறைவான பிறகு பழைய அடையாளத்தை முற்றிலும் மறைத்து, புதிய பெயரில் டேராடூனில் கட்டிட ஒப்பந்ததாரராக மாறி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார் அமித் யாதவ். சமீபத்திய புகைப்படங்கள் எதுவும் இல்லாததால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் இருந்த நிலையில், 1999-ம் ஆண்டு வழக்கில் பதிவு செய்யப்பட்டிருந்த பழைய பயோமெட்ரிக் மற்றும் கைரேகை பதிவுகளை போலீசார் மீண்டும் கையில் எடுத்தனர். அந்த தடயங்களை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கடந்த 13-ம் தேதி டேராடூனில் அவர் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து அதிரடியாக கைது செய்துள்ளனர். கால் நூற்றாண்டுக்கும் மேலாக பெயர், வாழ்க்கை என அனைத்தையும் மாற்றி ‘புதிய மனிதராக’ வாழ்ந்த ஆயுள் கைதியின் ஆட்டம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது!

இந்தியா

இரண்டாவது திருமணம் செய்தால் 20% சம்பளம் ‘கட்’! அசாம் அரசின் அதிரடி எச்சரிக்கை!

முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்தால், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவித்துள்ளார். முதல் மனைவியை கைவிட்டு, விவாகரத்து பெறாமலேயே மற்றொரு பெண்ணுடன் திருமணம் அல்லது குடும்ப வாழ்க்கை நடத்தும் ஊழியர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். முதல் மனைவி அரசிடம் விண்ணப்பித்தால், பிடித்தம் செய்யப்படும் 20 சதவீத சம்பளம் நேரடியாக அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும், திருமண விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் காலத்திலும் இந்த பிடித்தம் தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமின்றி, இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என அசாம் அரசு எச்சரித்துள்ளது. ஏற்கனவே அசாமில் பலதாரத் திருமணத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் மனைவி ஆதரவின்றி தவிக்கும் நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதேபோன்ற பாதுகாப்பை தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கும் வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.

இந்தியா

சிகிச்சைக்காக வந்தவர்கள்… அதிகாலையில் உயிரிழந்த சோகம்! – பதறவைக்கும் கொல்கத்தா சம்பவம்

மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவின் பரபரப்பான மிர்சா காலிப் தெருவில் உள்ள ஹோட்டலில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூ மார்க்கெட் அருகே உள்ள இந்த ஹோட்டலில் அதிகாலை சுமார் 1.45 முதல் 2 மணியளவில் திடீரென தீப்பற்றிய நிலையில், பெரும் புகை மண்டலம் உருவானது. அப்போது பெரும்பாலானோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், தீயில் சிக்கியவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. தகவலறிந்து தீயணைப்புத்துறையினர், போலீசார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் ஜன்னல்களை உடைத்தும், பல்வேறு வழிகளில் உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். இந்த கோர விபத்தில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர்; மேலும் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணியின்போது ஹோட்டல் முழுவதும் அடர்த்தியான புகை சூழ்ந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா வந்திருந்ததாகவும் தீயணைப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வரும் வங்கதேசத்தினர் அதிகம் தங்கும் பகுதியாக நியூ மார்க்கெட் சுற்றுவட்டாரம் உள்ள நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. எனினும், ஆரம்பகட்ட தகவல்களில் ஏசி வெடிப்பு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேநேரத்தில், ஹோட்டலில் அவசரகால வெளியேறும் வசதி, தீயணைப்பு பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் முறையாக இருந்தனவா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கியமாக, மேற்கு வங்கத்தில் இரண்டு நாட்களுக்குள் அடுத்தடுத்து நடந்த ஹோட்டல் தீ விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது, அங்குள்ள ஹோட்டல்களின் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. 

இந்தியா

கசக்கும் சர்க்கரை விலை… மக்களுக்கு ‘ஸ்வீட்’ நியூஸ் சொல்ல மத்திய அரசின் அதிரடி பிளான்!

பண்டிகை காலம் நெருங்கும் நேரத்தில் சர்க்கரை விலை உச்சத்தைத் தொட்டுள்ளதால், பொதுமக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் சர்க்கரை தட்டுப்பாடு, பண்டிகை கால தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மகாராஷ்டிராவில் சர்க்கரை விலை கிலோ ரூ.46 வரை உயர்ந்துள்ளது. இதனால் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு அவசர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்வதற்கான 100 சதவீத இறக்குமதி வரியை குறைப்பது அல்லது முழுமையாக நீக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவையான சூழல் ஏற்பட்டால் சுமார் 10 லட்சம் டன் சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை சர்க்கரைக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சந்தையில் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க பதுக்கலுக்கு ‘செக்’ வைக்கும் வகையில் இருப்பு கட்டுப்பாடுகள், சர்க்கரை ஆலைகளின் இருப்பு வரம்பை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதுமட்டுமின்றி, எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரையை பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்தி, அந்த சர்க்கரையை உள்நாட்டு சந்தைக்கு திருப்பிவிடும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட முக்கிய சர்க்கரை உற்பத்தி மாநிலங்களில் கரும்பு அரவையை வழக்கத்தைவிட 10 முதல் 15 நாட்களுக்கு முன்பே தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Scroll to Top