26 ஆண்டுகள் ‘டிமிக்கி’… காட்டிக் கொடுத்த கைரேகை: போலீஸில் மாட்டிய ‘பில்டர்’ கைதியின் கதை!
1995-ல் நடந்த ரூ.1 கோடி கடத்தல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர், 26 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் ரிஷி சேத்தி என்பவரை கடத்தி, அவரது குடும்பத்திடம் ரூ.1 கோடி பிணைத்தொகை கேட்கப்பட்ட வழக்கில் அமித் யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். போலீசாரின் பொறி மூலம் அவர் பிடிபட்டதுடன், கடத்தப்பட்ட நபரும் பத்திரமாக மீட்கப்பட்டார். 1999-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீட்டின்போது கிடைத்த ஒரு மாத இடைக்கால ஜாமீனை பயன்படுத்தி தப்பியவர், அதன் பிறகு 26 ஆண்டுகளாக போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி வந்துள்ளார். தலைமறைவான பிறகு பழைய அடையாளத்தை முற்றிலும் மறைத்து, புதிய பெயரில் டேராடூனில் கட்டிட ஒப்பந்ததாரராக மாறி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார் அமித் யாதவ். சமீபத்திய புகைப்படங்கள் எதுவும் இல்லாததால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் இருந்த நிலையில், 1999-ம் ஆண்டு வழக்கில் பதிவு செய்யப்பட்டிருந்த பழைய பயோமெட்ரிக் மற்றும் கைரேகை பதிவுகளை போலீசார் மீண்டும் கையில் எடுத்தனர். அந்த தடயங்களை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கடந்த 13-ம் தேதி டேராடூனில் அவர் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து அதிரடியாக கைது செய்துள்ளனர். கால் நூற்றாண்டுக்கும் மேலாக பெயர், வாழ்க்கை என அனைத்தையும் மாற்றி ‘புதிய மனிதராக’ வாழ்ந்த ஆயுள் கைதியின் ஆட்டம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது!



