August 19, 2026

தமிழ்நாடு

கோவை ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ.கோலி’! பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CAG அறிக்கை

கோவை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் ‘ஈ.கோலி’ (E. coli) பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய தலைமைத் தணிக்கைத் துறை (CAG) வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையங்களில் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்தபோது, கோவை உள்ளிட்ட 8 நிலையங்களின் குடிநீர் மாதிரிகளில் ஈ.கோலி பாக்டீரியா கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கழிவுநீர் அல்லது மனித, விலங்குகளின் கழிவுகள் குடிநீரில் கலந்திருப்பதற்கான முக்கிய எச்சரிக்கையாக ஈ.கோலி கருதப்படுகிறது. மேலும், குடிநீரில் குளோரின் அளவு மற்றும் பாக்டீரியாவியல், ரசாயன பரிசோதனைகள் உரிய கால இடைவெளியில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் CAG சுட்டிக்காட்டியுள்ளது.  கோவை மட்டும் அல்ல… நாடு முழுவதும் ரயில் நிலையங்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் CAG அறிக்கை பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. ஆய்வு செய்யப்பட்ட 512 ரயில் நிலையங்களில் 89 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலையங்களில் குடிநீர், கழிப்பறை, இருக்கை, நடைமேடை நிழற்கூரை உள்ளிட்ட குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், ரயில் நிலையங்களில் சுமார் 20,000 இடங்களில் ‘டேங்க் டு டேப்’ நீர் சுத்திகரிப்பு அமைப்புகளை நிறுவவும், குடிநீர் தரத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். “தாகம் தீர்க்க ரயில் நிலையத்தில் குடிக்கும் தண்ணீரே… உடலுக்கு ஆபத்தாக மாறிவிடுமா?” என்ற கேள்வியை கோவை சம்பவம் எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு

“போலீஸ் அடித்ததால் இறந்தாரா?” – பரமசிவம் மரணத்தில் மதுரை போலீஸ் பகீர் விளக்கம்!

மதுரையில் ஜோதிடரும் கோயில் பூசாரியுமான பரமசிவம் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், “போலீசார் தாக்கியதால் அவர் உயிரிழந்தார்” என குடும்பத்தினர் சுமத்திய குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் மதுரை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. போலீஸ் தரப்பின்படி, ஜூலை 17-ம் தேதி பரமசிவத்துக்கும் அருகில் வசித்த தம்பதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது; இதுதொடர்பாக இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஜூலை 23-ல் கைது செய்யப்பட்டு, பின்னர் காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஜூலை 24-ம் தேதி வீட்டில் கீழே விழுந்து தலையில் அடிபட்டதாக கூறிய பரமசிவம், ஆகஸ்ட் 5-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது போலீசாரிடம், “தவறி விழுந்தேன்; போலீஸ் நடவடிக்கை தேவையில்லை” என அவரே தெரிவித்ததாகவும், அது காவல் நிலைய பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் கூறியுள்ளது. இதற்கிடையே, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியும் அதை ஏற்காமல் பரமசிவம் ஆகஸ்ட் 6-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வெளியேறியதாகவும், பின்னர் உடல்நிலை மோசமடைந்து ஆகஸ்ட் 16-ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது. ஆனால், “காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால்தான் கணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்” என அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளதால் சர்ச்சை நீடிக்கிறது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதுடன், மாஜிஸ்திரேட் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் அறிக்கை அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, தலைப்புச் செய்திகள்

கோவளத்தில் கூடும் தென் மாநிலங்கள்… விஜய்யை சந்திக்கிறாரா அமித்ஷா?

சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தென்மாநில முதல்வர்கள் கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு, எல்லைப் பிரச்சனைகள் மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான தென்மாநிலங்களின் கவலைகள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், இக்கூட்டத்தின் ஊடே மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிழக முதல்வர் இடையே தனியாகவோ அல்லது சந்திப்பின் போதோ ஆலோசனைகள் நடைபெறக்கூடும் என்ற அரசியல் பேச்சுக்கள் மேலெழுந்துள்ளன. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் உறுதியான நிலைப்பாடு மற்றும் மாநில உரிமைகள் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், இம்மாநாடு தேசிய அளவிலும், மாநில அரசியல் தளத்திலும் பெரும் எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சினிமா, தலைப்புச் செய்திகள்

“மோசமான படம்” என்ற ஒரே வார்த்தையால் நடந்த அதிசயம்! – ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.20 கோடிக்கு எகிறிய வசூல்

“இது 2026-ம் ஆண்டின் மோசமான படமாக இருக்கலாம்!” — சீனாவில் வெளியான ஒரு அனிமேஷன் படத்தைப் பற்றி ரசிகர்கள் வைத்த கமெண்ட் இதுதான். ஆனால், அதுவே அந்தப் படத்துக்கு மிகப்பெரிய விளம்பரமாக மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியான ‘நியூ லாய்’ (Niu Lai) திரைப்படம், முதல் 10 நாட்களில் வெறும் 7,700 யுவான் — இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சம் மட்டுமே வசூலித்தது. நாடு முழுவதும் 300-க்கும் குறைவானவர்களே டிக்கெட் வாங்கியிருந்த நிலையில், படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதன்பிறகு கதாபாத்திரங்களின் அசைவுகள், அனிமேஷன் தரம், குரல், கதை என அனைத்தையும் ரசிகர்கள் வறுத்தெடுக்கத் தொடங்கினர். “மாணவர் செய்த பயிற்சிப் படம் போல இருக்கிறது”, “AI-யைவிட மோசம்” என விமர்சனங்கள் குவிந்த நிலையில், அந்தப் படத்தைப் பார்க்கும் ஆர்வமும் அதே வேகத்தில் அதிகரித்தது. “இவ்வளவு மோசமா? அப்படி என்னதான் இருக்கிறது?” என்ற ஆர்வமே திரையரங்குகளுக்கு பார்வையாளர்களை அழைத்து வந்தது. அதன் பிறகு நடந்ததுதான் ட்விஸ்ட்! Maoyan வசூல் தரவுகளின்படி, தற்போது ‘நியூ லாய்’ 1.49 கோடி யுவானைத் தாண்டி, இந்திய மதிப்பில் சுமார் ரூ.19–20 கோடி வசூலைக் குவித்துள்ளது. அதாவது, வெறும் ரூ.1 லட்சத்தில் தொடங்கிய வசூல் சில நாட்களில் ரூ.20 கோடியை நெருங்கியிருக்கிறது! பிரம்மாண்ட படங்களுடன் வசூல் பட்டியலில் இந்தப் படத்தின் பெயரும் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. அதைவிட ஆச்சரியம், இந்த 86 நிமிட அனிமேஷன் படத்தை உருவாக்கியது வெறும் இருவர் மட்டுமே — சின் யுமெங் மற்றும் சன் லிஃபாங். தாய்–மகன் எனக் கூறப்படும் இருவரும் சுமார் 5 ஆண்டுகள் உழைத்து, எழுத்து, இயக்கம், தயாரிப்பு, குரல் நடிப்பு என பல பொறுப்புகளை தாங்களே கவனித்துள்ளனர். நல்ல படம் என்ற விளம்பரம் தோல்வியடைந்த நிலையில், “மோசமான படம்” என்ற விமர்சனமே ஒரு படத்தை ரூ.20 கோடி வசூல் செய்ய வைத்திருக்கிறது! சினிமாவில் சில நேரங்களில் எதிர்மறை விளம்பரம்கூட எவ்வளவு பெரிய ஆயுதமாக மாறும் என்பதற்கு ‘நியூ லாய்’ ஒரு வித்தியாசமான உதாரணமாகியுள்ளது.

சினிமா

‘4 நாளில் இத்தனை கோடியா..?’ – ஃபாக்ஸ் ஆபீஸை திணறடிக்கும் சூர்யா!

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஆகஸ்ட் 14 அன்று வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வசூல் மழை பொழிந்து வருகிறது. குடும்பங்கள் கொண்டாடும் கதையம்சத்துடன் உருவான இத்திரைப்படம் வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் 1.6 மில்லியன் டாலருக்கும் அதிகமான வசூலைக் குவித்து, சூர்யாவின் பாக்ஸ் ஆபிஸ் பவரை மீண்டும் நிரூபித்துள்ளது. மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் போன்ற பட்டாளமே நடித்திருக்கும் இப்படத்தின் வெற்றியை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். ரிலீசான வெறும் 4 நாட்களிலேயே 2026-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. வார நாட்களிலும் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருவதால், வரவிருக்கும் நாட்களிலும் இந்தப் படத்தின் வசூல் வேட்டை மேலும் அதிகரிக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன!

சினிமா

ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! ‘ஜெயிலர் 2’ First single ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி ‘ஜெயிலர் 2’ முதல் சிங்கிள் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “The Feast is ready!” என்ற மாஸ் அறிவிப்புடன் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ள படக்குழு, ரஜினியின் ‘டைகர்’ முத்துவேல் பாண்டியன் லுக்கை மீண்டும் ரசிகர்கள் முன் கொண்டு வந்துள்ளது. 2023-ல் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அனிருத்தின் இசையும் பார்க்கப்பட்ட நிலையில், அதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது முதல் சிங்கிள் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் ‘காவாலா’, ‘ஹுக்கும்’ என முதல் பாகத்தில் இசையால் அதிரவைத்த அனிருத், இந்த முறை என்ன மாஸ் சம்பவம் செய்யப்போகிறார்? என்ற கேள்விதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாப்பிக். நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

அனிருத்–காவ்யா மாறன் டும் டும் டும்? எந்த நாட்டில் திருமணம் நடக்குது தெரியுமா?

தமிழ் திரையுலகின் ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சி.இ.ஓ காவ்யா மாறன் இருவருக்கும் திருமணம் நடைபெறப் போவதாகச் சமூக வலைதளங்களில் மீண்டும் ஒரு தகவல் தீயாகப் பரவி வருகிறது. ஏற்கனவே இவர்களைப் பற்றிப் பல்வேறு வதந்திகள் உலா வந்த நிலையில், தற்போது வருகிற நவம்பர் மாதம் தீபாவளிக்குப் பிறகு கிரேக்க நாட்டில் (Greece) இவர்களது பிரம்மாண்டமான ‘டெஸ்டினேஷன் வெடிங்’ நடைபெறவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. சமீபத்தில் அனிருத்தின் உறவினரும் நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன், அனிருத்தின் திருமணம் குறித்துப் பேசிய சில கருத்துகள் இந்தத் தகவலுக்கு மேலும் இறக்கை கட்டிப் பறக்க வைத்துள்ளன.  இருப்பினும், இந்தத் திருமணம் குறித்த செய்திகள் எதுவுமே அதிகாரப்பூர்வமாக இரு தரப்பிலிருந்தும் உறுதிப்படுத்தப்படவில்லை. அனிருத் அல்லது காவ்யா மாறன் குடும்பத்தினர் முறைப்படியான அறிவிப்பை வெளியிடும் வரை, சமூக வலைதளங்களில் வலம் வரும் இந்தச் செய்திகளை வெறும் ‘தகவல்’ அல்லது ‘வதந்தி’ என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அனிருத்–காவ்யா மாறன் திருமணப் பேச்சு இன்று மீண்டும் சினிமா மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. 

Scroll to Top