August 23, 2026

மாவட்டம்

“கொட்டியதை அள்ளாம ஒரு வண்டியும் நகராது!” – சிறைபிடிக்கப்பட்ட 50 லாரிகள்; அரண்டுப்போன திருப்பூர் மாநகராட்சி

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் நாள்தோறும் சுமார் 700 டன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுவரை பல்வேறு பகுதிகளில் சாலையோரமாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது சேகரிக்கப்படும் குப்பைகளை ஊத்துக்குளி அருகே உள்ள ஏ.பெரியபாளையம் பகுதியில் பயன்பாடின்றி கிடக்கும் பாறைக்குழியில் கொட்டி வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் குப்பைகள் கொண்டு வரப்பட்டு பாறைக்குழியில் கொட்டியுள்ளனர். தங்கள் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொடிய தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆத்திரமடைந்த ஏ. பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஒன்றுகூடி குப்பைகளை ஏற்றி வந்த லாரிகளை அதிரடியாகச் சிறைபிடித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஏற்கனவே பாறைக்குழியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை முழுமையாக அகற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு உண்டானது. சில மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் பொதுமக்கள் பல்வேறு நிபந்தனைகளுடன் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். திருப்பூர் மாநகராட்சியின் இந்த செயல்பாட்டிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், பாறைக்குழியில் ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படுமா, இனி அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மாவட்டம்

காரில் விழுந்த ‘அந்த ஒரு பொருள்’… நொடியில் லாக் ஆன பிரேக்! – திருப்பூரில் 3 வாகனங்கள் நொறுங்கி பகீர் விபத்து

திருப்பூர் மன்னரை பகுதியில் இருந்து செங்கப்பள்ளி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஊத்துக்குளி அடுத்த செங்கப்பள்ளி அருகே கார் பயணித்துக் கொண்டிருந்தபோது, காரின் உள்ளே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில் திடீரென ஓட்டுநரின் கால் பகுதியில் கீழே விழுந்து, பிரேக் பெடலுக்கு அடியில் லாவகமாகப் போய் மாட்டிக்கொண்டது. காரை நிறுத்த ஓட்டுநர் பிரேக்கை மிதித்தபோது, பாட்டில் அடைத்துக் கொண்டதால் பிரேக் பிடிக்க முடியவில்லை. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது அதிவேகமாக மோதியது. அந்த வேகத்திலும் நிற்காமல் பாய்ந்து சென்று, எதிரே சத்தியமங்கலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மீதும் பலமாக மோதி நின்றது. இந்தத் தொடர் விபத்தில், ஆட்டோ அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர், விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் மற்றொரு காரில் பயணம் செய்தவர்கள் என 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இதில் உயிர்ப்பலி எதுவும் ஏற்படவில்லை. விபத்தில் படுகாயமடைந்த மொத்தம் 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஊத்துக்குளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே எக்காரணம் கொண்டும் தண்ணீர் பாட்டில்கள், பொம்மைகள் போன்ற பொருட்களை வைக்காதீர்கள்! பிரேக் பெடலுக்கு அடியில் அது உருண்டு சென்றால் பிரேக் இயங்காமல் போகும். ஒரு சிறிய அலட்சியம், உயிரையே பறிக்கும் ஆபத்தாக மாறக்கூடும் என்பதற்கு இந்த விபத்தே சாட்சி!

சினிமா

“என்னதான் விளம்பரம் செய்தாலும்…” திருப்பூர் ரசிகர்களிடம் ரியோ ராஜ் வைத்த கோரிக்கை!

இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில், ரியோ ராஜ், வர்த்திகா உள்ளிட்டோர் நடிப்பில் இந்த வாரம் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ராம் இன் லீலா’. இப்படம் திரையிடப்பட்டு வரும் திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு படக்குழுவினர் திடீரென வருகை தந்தனர். இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன், நடிகர் ரியோ ராஜ், நடிகை வர்த்திகா உள்ளிட்ட படக்குழுவினர் திரையரங்கிற்குள் நுழைந்ததும், அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றனர். அப்போது ரசிகர்களிடம் பேசிய படக்குழுவினர், “படத்திற்கு நல்ல துவக்கம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று திரையரங்குகளில் ரசிகர்களை நேரில் சந்தித்து வருகிறோம். அதன்படி திருப்பூருக்கும் வந்துள்ளோம்” என்றனர். நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், “திரையரங்குகளில் எங்கள் படத்தை மக்கள் ரசித்துப் பார்ப்பதும், படம் மக்களுக்கு பிடித்திருப்பதும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. படம் உங்களுக்கு பிடித்திருந்தால், அதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமும் எடுத்துச் சொல்லுங்கள். என்னதான் விளம்பரம் செய்தாலும், மக்களின் வாய்மொழி விமர்சனம்தான் ஒரு படத்தை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். இந்தச் சின்னப் படத்திற்கு உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம்” என்றார்.

மாவட்டம்

“யார்ரா இவன், ஒரு செகண்ட்ல தூக்கிட்டான்?!” – திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் கைவரிசை காட்டிய ‘கில்லாடி திருடன்’! 

திருப்பூர் கோவில் வழி பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (30), அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது மனைவியுடன் புத்தாடைகள் வாங்குவதற்காக திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பேருந்துகள் உள்ளே நுழையும் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மனைவியுடன் துணிக்கடைக்கு சென்றுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்து பார்த்தபோது, அவர் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அருணாசலம், உடனடியாக அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது, இளைஞர் ஒருவர் அப்பகுதியில் நோட்டமிட்டு, அருணாசலத்தின் இருசக்கர வாகனத்தை கேஷூவலாக அங்கிருந்து எடுத்துக்கொண்டு தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து, பைக்கின் உரிமையாளர் அருணாசலம் கொடுத்த புகாரின்பேரில், திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வாகனத்தை திருடிச் சென்ற நபரை அடையாளம் கண்டு பிடிக்கவும், திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை மீட்கும் முயற்சியிலும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.   பொது இடங்களில் வண்டியை நிறுத்திட்டுப் போறீங்களா? ‘கொஞ்சம் உஷாரா இருங்க மக்களே… இல்லன்னா உங்க வண்டிக்கும் இதே நிலைமைதான்! 

Scroll to Top