TW Exclusive, தலைப்புச் செய்திகள்

‘பிரித்துப் போடு!’ – கட்சி மறுசீரமைப்பில் எம்.பி பிரகாஷின் சித்து விளையாட்டு… கொந்தளிக்கும் ஈரோடு உடன்பிறப்புகள்!

2026 சட்டமன்றத் தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு, சமீபத்தில் நடைபெற்ற  திமுக செயற்குழு கூட்டத்தில், கட்சியை மறுசீரமைக்க நிர்வாக ரீதியான பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதனையடுத்து, இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டம் என 110 கட்சி மாவட்டங்களாகப் பிரித்து தலைமை அறிவித்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகள் ஈரோடு கிழக்கு மாவட்டம் (ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி), ஈரோடு மத்திய மாவட்டம் (ஈரோடு மேற்கு, பெருந்துறை), ஈரோடு வடக்கு மாவட்டம் (பவானி, அந்தியூர்), ஈரோடு மேற்கு மாவட்டம் (கோபி, பவானிசாகர்) என நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதில் தான் இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட பெரும் மாநகராட்சிகளைத் தவிர, மற்ற மாநகராட்சிகளில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள், ஒரே கட்சி மாவட்டத்தில் வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஈரோடு மாநகராட்சியில் உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி ஈரோடு கிழக்கு மாவட்டத்திலும், ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி ஈரோடு மத்திய மாவட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது மாநகர திமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் பின்னணியில், ஈரோடு  எம்.பி-யும், திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளருமான கே.இ.பிரகாஷ்  இருக்கிறார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசுகையில், “ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், பெருந்துறை மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிகள் மற்றொரு மாவட்டமாகவும் பிரிக்கப்படும் என கட்சியினர் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனது சொந்த ஊர் அமைந்துள்ள மொடக்குறிச்சி தொகுதியில் களமிறங்க காய்நகர்த்தி வரும் பிரகாஷ், மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை தொகுதிகள் ஒரு மாவட்டமாக பிரிக்கப்பட்டால், மாவட்ட தலைநகரத்தில் தன்னால் ஆதிக்கம் செலுத்த முடியாது என நினைக்கிறார். எனவே, மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, பெருந்துறை தொகுதியை மத்திய மாவட்டத்தில் தள்ளிவிட்டு, ஈரோடு கிழக்கு மாவட்டத்தில், ஈரோடு கிழக்கு மற்றும் மொடக்குறிச்சி தொகுதிகள் இருக்குமாறு பார்த்துக் கொண்டார் . மாநகராட்சியில் உள்ள இரண்டு சட்டமன்றத் தொகுதிகளும் வெவ்வேறு கட்சி மாவட்டங்களில் சேர்க்கப்பட்டால், கட்சி நிர்வாகத்தில் குளறுபடிகள் ஏற்படுவதுடன், கட்சிப் பணிகளிலும் தொய்வு ஏற்படும். எதிர்வருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் கட்சியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குள்ளாகும். இவையெல்லாம் தெரிந்திருந்தும் பிரகாஷ் தன்னுடைய சுயநலத்திற்காக மாநகராட்சியில் உள்ள இரண்டு தொகுதிகளையும் பிரித்துப் போட்டு ‘கேம்’ ஆடியுள்ளார். இந்த மாவட்ட பிரிப்பு பின்னணியில், மாநகரில் ஆதிக்கம் செலுத்துவதைத் தாண்டி, மற்றொரு கணக்கும் இருக்கிறது.  அதாவது, தனது சொந்தத் தொகுதியான மொடக்குறிச்சியில் எம்.பி பிரகாஷின் செயல்பாடுகள் மீது கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தி உள்ளது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் பிரகாஷ் போட்டியிட்டால் தேறுவது சிரமம். அதேபோல, அதிமுகவின் கோட்டையான பெருந்துறையில் களமிறங்கினாலும் அவருக்குத் தோல்வி உறுதி. எனவே, மாவட்ட தலைநகரும், சிறிய தொகுதியுமான ஈரோடு கிழக்கு தொகுதியை தன்னுடைய மாவட்டத்தில் சேர்த்துக் கொண்டால், மொடக்குறிச்சி தொகுதி இல்லையென்றால் ஈரோடு கிழக்கில் போட்டியிட்டு வென்றுவிடலாம் என்ற சுயநலக் கணக்கோடு, கட்சியின் மறு சீரமைப்பிலும் தன்னுடைய சித்து விளையாட்டை பிரகாஷ் அரங்கேற்றியுள்ளார். கட்சிப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள, மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஈரோடு கிழக்கு மட்டும் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிகளை ஒரே மாவட்டமாகவும், பெருந்துறை மற்றும் மொடக்குறிச்சியை மற்றொரு மாவட்டமாகவும் தலைமை மாற்றி அறிவிக்க வேண்டும்” என தங்களது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர். 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியை மறு சீரமைக்க முயற்சிக்கும் திமுக தலைமை, மறுபடியும் உள்ளடி அரசியலுக்கு ஆதரவு கொடுக்குமா? அல்லது தொண்டர்களின் குரலுக்கு செவி சாய்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!